×

கழிவுநீரை வெளியேற்றிய 7 ஆலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு

ஈரோடு, பிப்.11: ஈரோட்டில் சாயக்கழிவுநீரை வெளியேற்றிய 7 ஆலைகளின் மின் இணைப்புகளை துண்டித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாயம், சலவை, பிரிண்டிங் மற்றும் தோல் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இதில் சாயம், சலவை மற்றும் தோல் தொழிற்சாலைகள் பூஜ்யநிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சுத்திகரிக்கப்பட்ட தொழிற்சாலை கழிவுநீரை மீண்டும் பயன்படுத்தி வருகிறது. அதேபோல, பிரிண்டிங் தொழிற்சாலைகளும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து மீண்டும் பயன்படுத்தி வருகிறது சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை வெளியேற்றும் ஆலைகள் தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பறக்கும்படை அலுவலர்களால் தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. மேலும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி உருவாக்கப்பட்ட கலெக்டர் தலைமையிலான மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு மூலம் பூஜ்யநிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை முறையாக பராமரிக்காமல் கழிவுநீரை அருகில் உள்ள கால்வாயில் வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, கலெக்டர் கதிரவன் உத்தரவின்பேரில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் உதயகுமார் தலைமையில் அதிகாரிகள் குழுவினர்  வெட்டுக்காட்டுவலசு, வீரப்பன்சத்திரம், கங்காபுரம், ஆர்.என்.புதூர் ஆகிய பகுதிகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கிருந்த 5 சாய, சலவை தொழிற்சாலைகள் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அந்த 5 ஆலைகளின் மின் இணைப்புகளை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதேபோல், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட 2 பிளாஸ்டிக் தொழிற்சாலைகளின் மின் இணைப்புகளும் கலெக்டர் கதிரவன் உத்தரவின்பேரில் துண்டிக்கப்பட்டது. ஈரோடு பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட மொத்தம் 7 ஆலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.சாயம், சலவை மற்றும் தோல் தொழிற்சாலைகள் பூஜ்யநிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும், பிரிண்டிங், சைசிங் தொழிற்சாலைகள் சுத்திகரிப்பு நிலையத்தையும் தொடர்ந்து முறையாக இயக்கி சுற்றுச்சூழலையும், நீர்நிலைகளையும் பாதுகாக்க வேண்டும். தொழிற்சாலை கழிவுநீர் மற்றும் திடக்கழிவுகளை நீர்நிலைகளில் விதிமீறி வெளியேற்றும் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கதிரவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags :
× RELATED பஞ்சகவ்யா தயாரிப்பு பயிற்சி...